நான் சேரதேசத்தில் பிறந்தவள். மலைவளமும், நீர்வளமும்,அடர்ந்த கானகவனமும் கொண்ட தேசமும் போலவே நானும், வடிவும் வனப்பும் கொண்டு உனக்காக காத்திருப்பவள். நீ கைப்பிடிக்கும் நாள் எண்ணி நோன்பிருப்பவள்.

ஆசைகளை உயிரென்னும் கயிர் கட்டி உன் ஓரப்பார்வை பட்டு அவிழட்டும் என விட்டுவைத்திருப்பவள். அவிழ்த்து என்னை அரவணைக்க வா! தங்கமாய் வடித்திருக்கிறான் என்னைப்படைத்த என் தேவன். உன் உதடுகள் பட்டு தங்கங்கள் உருகி நம் உடலுக்கும் உயிருக்கும் ஆபரணங்கள் வடிக்கட்டும் வா!

இசையின் வகைகள் ஈராயிரம் கேட்டிருக்கிறேன். உயிரின் ஓசை கேட்க எனக்கு ஆசை. ஊர் ஓசை அடங்கியதும் உயிரின் ஓசை கேட்போம் விரைந்து வா. உன் வருகையினால் நிகழப்போகும் வசந்த கால வாசனைகளுக்கு முன்னோட்டமாய் மஞ்சள் பூசிக் குளித்திருந்தேன். நல்ல கெட்டியான பட்டு அது. உன் நிறத்தை ஞாபகப் படுத்தும் செந்நிற பட்டு. மிகவும் சிரத்தை எடுத்து மடிப்பு கலையாமல் உடுத்திக்கொள்கிறேன், அணைக்கும் உனது கைகள் பட்டு கசங்குப்போகும் நினைவுகள் என் மஞ்சள் அத்தனையையும் சிகப்பாக்கிப்போயின.

கூந்தல் முழுதும் பதியும் வண்ணம் மலர்சூட்டி வைத்திருக்கிறேன். கூந்தல் முழுதும் மலர்வாசம். நீ வந்து சேரும் இரவு முடிந்ததும் எல்லாவற்றிலும் உன் வாசமே வீசும். மலர்கள் எல்லாம் கட்டிலில் நசுங்கி இனி சோகமாகவே பேசும்.

வானிலும் இல்லை. மண்ணிலும் இல்லை. நிலவிலும் இல்லை. வெக்கை, வெளி,ஆறு, காடு என எங்கேயும் கிடைக்காத ஏதோ ஒன்று, ஏகாந்தமான ஏதோ ஒன்று உனக்குள் நானும், எனக்குள் நீயும் தேட விரைந்து வா. அணையட்டும் என் இல்லத்தின் அனைத்து தீபங்களும். வெளிச்சத்தில் கிடைக்காத ஏகாந்தம் இந்த கும்மிருளில் நமக்கு வாய்க்கட்டும்.

எத்தனையோ காமங்களை வெட்கமின்றி பார்த்துவிட்ட நிலவுக்கும் நாணம் விளைவிக்கும் வண்ணம் – மேகப்போர்வை உடுத்தி தூங்கும் வண்ணம் கூடலாம் வா!

பாடல் : நெஞ்சினிலே..நெஞ்சினிலே

இயற்றியவர் : வைரமுத்து

இசை : A.R.ரஹ்மான்

பாடியவர் : S.ஜானகி.

 
Nenjinile.mp3